மண்பாண்டத் தொழிலாளர்கள் கட்டணமின்றி வண்டல் மண் எடுத்துச் செல்ல அனுமதி

மண்பாண்டத் தொழிலாளர்கள் கட்டணமின்றி வண்டல் மண் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Update: 2024-07-04 11:01 GMT

மாவட்ட ஆட்சியர்

மதுரை மாவட்டத்தில் நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் பராமரிப்பில் உள்ள தேர்வு செய்யப்பட்ட 787 நீர்நிலைகளிலிருந்து வண்டல் மண் / மண் எடுப்பதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக (Removal of clay and silt) மதுரை மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எண்.06, நாள்.24.06.2024 பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மதுரை கிழக்கு வட்டத்தில் 126, மதுரை மேற்கு வட்டத்தில் 4, மதுரை தெற்கு வட்டத்தில் 6, மதுரை வடக்கு வட்டத்தில் 70, வாடிப்பட்டி வட்டத்தில் 37, மேலூர் வட்டத்தில் 270, திருப்பரங்குன்றம் வட்டத்தில் 9, உசிலம்பட்டி வட்டத்தில் 83, பேரையூர் வட்டத்தில் 73, திருமங்கலம் வட்டத்தில் 62 மற்றும் கள்ளிக்குடி வட்டத்தில் 47 நீர்நிலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், வண்டல் மண் / மண் எடுப்பதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஊரக வளர்ச்சித் துறை / நீர்வளத்துறை செயற்பொறியாளர்கள், புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர், வருவாய் வட்டாட்சியர்கள், கிராம நிருவாக அலுவலர்கள் மற்றும் ஏரி / நீர்த்தேக்கங்களின் பொறுப்பாளர்கள் ஆகியோர்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (Standard Operating Procedure) அரசிடமிருந்து வரப்பெற்றுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு. 1. விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் தங்களது விண்ணப்பம் மற்றும் ஆவணங்களை www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக சமர்ப்பிக்க வேண்டும்.

ii. இணையதளத்தின் வாயிலாக பெறப்பட்ட விண்ணப்ப மனுக்களை தொடர்புடைய கிராம நிருவாக அலுவலர்கள் பரிசீலனை செய்து அனுமதி அளிப்பதற்கு அல்லது நிராகரிப்பதற்கு தொடர்புடைய வருவாய் வட்டாட்சியருக்கு பரிந்துரை செய்ய வேண்டும். அவ்வாறு வரப்பெறும் விண்ணப்பங்களை வருவாய் வட்டாட்சியர்கள், புல எண், பரப்பளவு, நிலத்தின் வகைப்பாடு மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்களின் உண்மைத் தன்மை,

குறித்து பரிசீலனை செய்து விண்ணப்பம் பெறப்பட்ட நாளிலிருந்து 10 (பத்து) நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நீர்நிலைகளிலிருந்து வண்டல் மண் / மணி எடுப்பதற்கு வருவாய் வட்டாட்சியரால் அனுமதி வழங்கப்படும். iii. மேற்படி அனுமதியானது,

விவசாய நில மேம்பாட்டிற்காக நன்செய் நிலம் எனில் ஏக்கர் ஒன்றுக்கு 75 க.மீ, ஹெக்டேர் ஒன்றுக்கு 185 க.மீட்டர் என்ற அளவிலும், புன்செய் நிலம் எனில் ஏக்கர் ஒன்றுக்கு 90 கனமீட்டர், ஹெக்டேர் ஒன்றுக்கு 222 க.மீட்டர் என்ற அளவிற்கு மிகாமலும் (இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும்), மண்பாண்டத் தொழில் செய்வதற்கு 60 க.மீட்டருக்கு மிகாமலும் வண்டல் மண் / மண் எடுத்துக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்படும். iv. வருவாய் வட்டாட்சியரால் பிறப்பிக்கப்பட்ட ஆணை கிடைக்கப்பெற்ற விவசாயிகள் / மண்பாண்டத் தொழிலாளர்கள் தொடர்புடைய நீர்நிலை ஆதாரங்களின் பொறுப்பு அலுவலர்களை அணுகி புல வரைபடத்தில் வண்டல் மண் / மண் எடுப்பதற்கு வரையறை செய்யப்பட்டுள்ள பகுதியில்,

தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மட்டும் தங்களுடைய வாகனம் அல்லது வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனத்தில் மட்டும் வண்டல் / மண் எடுத்துச் செல்ல வேண்டும். v. தினசரி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே வண்டல் மண் / மண் எடுத்துச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும்.

எனவே, விவசாயிகள் / மண்பாண்டத் தொழிலாளர்கள் கட்டணமின்றி வண்டல் மண் / மண் எடுத்துச் சென்று விவசாய நில மேம்பாடு மற்றும் மண்பாண்டத் தொழில் செய்வதற்கு பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக தங்களுடைய விண்ணப்ப மனுக்களை உரிய ஆவணங்களுடன் www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என்ற விபரம்,

இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா,தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News