செங்கல்பட்டு அருகே உடற்பயிற்சி கூடத்தை சீரமைக்க கோரிக்கை
செங்கல்பட்டு அருகே உடற்பயிற்சி கூடத்தை சீரமைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம்,பவுஞ்சூர் அருகே நெல்வாய்பாளையம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள கிராம இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் பயன்பாட்டிற்காக, ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஊரக வளர்ச்சித்துறை சார்பில், 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், உடற்பயிற்சி மையத்துடன் கூடிய அம்மா பூங்கா அமைக்கப்பட்டது.
அப்பகுதி இளைஞர்கள் தங்களது உடலை, 'பிட்னஸ்' ஆக மாற்ற, தினமும் இங்கு வந்து உடற்பயிற்சி செய்து வந்தனர். கடந்த சில மாதங்களாக உடற்பயிற்சி கூடம் பராமரிப்பு இல்லாததால், உபகரணங்கள் பழுதடைந்து வருகிறது. இதனால், அப்பகுதி இளைஞர்கள் உடற்பயிற்சி மையத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, உடற்பயிற்சி கூடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.