தஞ்சையில் தொழிலாளியைக் கொன்று கொள்ளை:இருவர் கைது

தஞ்சையில் தொழிலாளியைக் கொன்று கொள்ளையடித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-04-25 16:04 GMT

தஞ்சாவூரில் தொழிலாளியைக் கொன்று கைப்பேசி, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற இருவரைக் காவல் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர். தஞ்சாவூர் அருகே, நாஞ்சிக்கோட்டை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (40). இவர் மருத்துவக்கல்லூரி சாலை ரகுமான் நகரிலுள்ள உணவகத்தில் சிக்கன் கிரில் மாஸ்டராக பணியாற்றி வந்தார்.

ஏப்ரல் 16 ஆம் தேதி வேலைக்கு சென்ற இவர் வீட்டுக்கு திரும்பவில்லை. இவரது மனைவி கமலாதேவி (35) கைப்பேசி மூலம் தொடர்பு கொள்ள முயன்றபோது, அணைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வந்தது.  இதையடுத்து, கமலாதேவி உறவினர்களுடன் இணைந்து பிரகாசை தேடி வந்தார். இந்நிலையில், மன்னர் சரபோஜி கல்லூரி மைதானம் அருகே மரங்களுக்கு இடையே பிரகாஷ் காயத்துடன் உயிரிழந்து கிடந்தார்.  த

கவலறிந்த மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தினர் நிகழ்விடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும் புதிய பேருந்து நிலையத்திலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது குடிபோதையில் இருந்த பிரகாஷை அவரது மோட்டார் சைக்கிளிலேயே ஒருவர் அழைத்து செல்வதும், பின் தொடர்ந்து மற்றொருவர் மோட்டார் சைக்கிளில் செல்வதும் தெரிய வந்தது.

இதன் அடிப்படையில், காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், தஞ்சாவூர் அருகே ரெட்டிப்பாளையம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் ஆட்டோ டிரைவர் தமிழ்நீதி (29), மங்களபுரம் அணில் நகரைச் சேர்ந்த ரமணி மகன் பிரவீன் (28) என்பதும், குடி போதையில் இருந்த பிரகாஷை இருவரும் மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று நிகழ்விடத்தில் தாக்கி, அவரது கைப்பேசி, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றதும்,

தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த பிரகாஷ் உயிரிழந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, தமிழ்நீதி, பிரவீனை காவல் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.

Tags:    

Similar News