தஞ்சை பசுபதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 850 ஏக்கர் நிலம் மீட்பு

தஞ்சை பசுபதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள 850ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலைத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-04-06 08:51 GMT

கோயில்

 உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தஞ்சை அருள்மிகு பசுபதீஸ்வரர் கோவில் மிகவும் பழமையானது. தேவாரப் பாடல்கள் பாட பெற்ற சிவஸ்தலமாக விளங்கும் இந்த கோவிலுக்கு சொந்தமாக சுமார் 1000 ஏக்கர் நிலம் உள்ளது.

தற்போதைய மதிப்பு (சுமார்ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும்) இந்த கோவிலுக்கு சொந்தமான நிலங்களை குத்தகைக்கு கொடுக்காமல், கோவிலின் டிரஸ்டிகளே தங்களுக்குள் பகிர்ந்து விவசாயம் செய்து வருகின்றனர். இதற்கு ஆண்டு ஒன்றுக்கு 575 ரூபாயும்,நெல்லும் கொடுக்கின்றனர். இந்த நிலங்களை முறையாக குத்தகைக்கு வழங்கினால், பல லட்சங்களை குத்தகையாகவும் வசூலிக்கலாம். இதனால் கோவிலுக்கு வருமானம் அதிகரிக்கும்.

ஆனால் அதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், 162 வெவ்வேறு சர்வே எண்களில் உள்ளன. ஆனால் அவை முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளன. இதனால் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அடையாளம் காண்பது கடினமான ஒன்றாக உள்ளது. இதனை பயன்படுத்தி கோவிலுக்கு சொந்தமான நிலங்களை பல ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலை தொடர்ந்தால் அந்நிலங்கள் கண்டுபிடிக்கப்படாமலேயே போகும் நிலையும் உருவாகும். ஆகவே இந்த கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அடையாளம் கண்டு, அவற்றை அளவீடு செய்து, மீட்டெடுத்து, முறையாக பராமரிக்க கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

ஆகவே தஞ்சை பசுபதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அடையாளம் கண்டு, அளவீடு செய்து, ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு முறையாக பராமரிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி சரவணன் முன் விசாரணைக்கு வந்தது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தற்போது அரசு கோவில் நிலங்களை மீட்பதில் முனைப்பாக செயல்பட்டு வருகின்றது.

மனுதாரர் கொடுத்த கோரிக்கையை ஏற்று இதுவரை சுமார் 850 ஏக்கர் நிலங்கள் கண்டறியப்பட்டு நில அளவீடு செய்யப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. மேலும் 20 சதவீத இடங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் இருப்பதால் மீட்பதில் சிக்கல் உள்ளது விரைவில் காவல்துறை மூலம் மீட்கப்படும் என தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதி.. கோவில் நிலம் 80% இடங்கள் மீட்கப்பட்டுள்ளது மீதமுள்ள 20 சதவீத கோவில் நிலங்களை மீட்பதற்கு காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் அதன் அடிப்படையில்,

இந்த நிலங்களை மீட்க திருவடைமதூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் DSP தலைமையில் போதிய பாதுகாப்புகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் ஆக்கிரமிப்பு உள்ள சொத்துக்களை மூன்று மாதத்தில் முறையாக அளவீடு செய்து மீட்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Tags:    

Similar News