திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம் !
தமிழக சிவாலயங்களில் அதிக பரப்பளவு கொண்ட இக்கோயில் சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்பு ,கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்டது. அவருக்கு பின் வந்த சோழ மன்னர்கள், பாண்டிய மன்னர்கள், சாளுவ மன்னர்கள், மேலும் பல மதில்கள், கோபுரங்கள், மண்டபங்கள், முதலியவற்றை கட்டி திருப்பணி செய்துள்ளனர். சுமார் 18 ஏக்கர் பரப்பளவில் 7- கோபுரங்கள், 5- பிரகாரங்கள், 9 தீர்த்தங்களுடன் திருவானைக்காவல் கோயில் உள்ளது. இந்த கோயிலில் உள்ள ராஜகோபுரத்தின் உயரம் 90 அடி. நான்காம் பிரகாரம் மதில் "திருநீறிட்டான் மதில்" என்று அழைக்கப்படுகிறது .இதன் நீளம் 8000 அடி ஆகும் .அகலம் 6-அடி .உயரம் 35 அடி. இந்த பிரகாரத்தை வலம் வந்து வழிப்பட்டால் நினைத்தது கை கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் இந்த கோயிலின் மதில் சுவர் கட்டப்படும் போது சிவபெருமானே சித்தராக எழுந்தருளி மேற்பார்வை செய்து, திருநீற்றையே கூலியாக கொடுத்து இதை கட்டியதாக புராண வரலாறு உண்டு .இக்கோயிலில் உள்ள கருவறையில் அம்புலிங்கத் தலம் என்பதற்கு ஏற்ப ,ஊற்று மூலம் கருவறையில் எப்போதும் தண்ணீர் ஊறிக் கொண்டே இருக்கும். 9-வாயில்கள் கொண்ட சாளரம் ஒன்றும் கருவறையில் உள்ளது .இதன் மூலம் ஜம்புகேஸ்வரரை தரிசித்தால் 9 திர்த்தங்களிலும் நீராடிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.