அண்ணன் மகனை பார்க்க விரைந்தோடிய ஸ்டாலின்..! 55 நாள்களாக துரை தயாநிதிக்கு தொடரும் மருத்துவப் போராட்டம் !

Update: 2024-05-09 06:01 GMT

 துரை தயாநிதி- ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலினின் அண்ணன் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி. தொழிலதிபரும், சினிமா தயாரிப்பாளருமான துரை தயாநிதி, கடந்த ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி திடீரென வீட்டில் மயக்கமடைந்ததையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து கடந்த மார்ச் மாதத்தில் துரை தயாநிதி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் துரை தயாநிதியை கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இன்றோடு சேர்த்து 55 நாள்களாக, சி.எம்.சி மருத்துவமனையில் துரை தயாநிதிக்கான சிகிச்சை தொடர்கிறது.

மு.க.ஸ்டாலினையும் மு.க.அழகிரியையும் ஒன்றிணைக்க குடும்ப உறுப்பினர்கள் செய்த முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக கடந்த மாதம் 2-ம் தேதி வேலூர் வந்த முதலமைச்சர் ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் முதலில் சி.எம்.சி மருத்துவமனைக்குச் சென்று துரை தயாநிதியின் உடல்நிலையை கேட்டறிந்து நலம் விசாரித்தார். அப்போது, தனது அண்ணன் மு.க.அழகிரியுடனும் 20 நிமிடங்கள் பேசி நலம் விசாரித்து சென்றார்.

சமீபத்தில் ஸ்டாலினின் சகோதரியான செல்வி வேலூர் சிஎம்சி சென்று துரை தயாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார். இதுகுறித்து ஸ்டாலினுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு துரை தயாநிதி உடல்நலம் குறித்து, முன்பிருந்ததை விட தற்போது உடல்நலம் முன்னேரியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து ஸ்டாலினும் அவரது அண்ணன் அழகிரியிடம் தொலைபேசியில் பேசியுள்ளார்.

இதனைதொடர்ந்து, இரண்டாவது முறையாக முதலமைச்சர் ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோருடேன் சி.எம்.சி மருத்துவமனைக்கு திடீரென நேரில் வந்து துரை தயாநிதியின் உடல் நிலை குறித்து கேட்டறிந்துள்ளார்.

Tags:    

Similar News