தூத்துக்குடி துப்பாக்கி சூடு : தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை மனுதாரருக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-03-28 02:43 GMT

பைல் படம் 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் தொடர்ந்த வழக்கில், துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட துறைரீதியான நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை தற்போது வரை வழங்கவில்லை என மனுதாரர் தரப்பு தெரிவித்தது.

அறிக்கை தயாராகி விட்டதாகவும், அடுத்த விசாரணைக்கு முன்பாக சமர்பிக்கப்படும் என்றும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறைரீதியான நடவடிக்கைகளின் விவரங்களை மனுதாரர் தரப்பிற்கு அறிக்கையாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 25ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது.

Tags:    

Similar News