ஷாட்ஸ்

தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு!!

தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, கோவை மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.

விஜய் சுற்றுப்பயணத்தில் திடீர் மாற்றம்!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் 27ம் தேதி வடசென்னை மற்றும் திருவள்ளூரில் பிரசாரம் செய்ய விஜய் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதனை மாற்றி சேலம் மற்றும் நாமக்கல்லில் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வரும் 27ஆம் தேதி சேலம் மற்றும் நாமக்கல்லில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சேலத்திற்கு பதிலாக கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலில் காலை 11 மணியளவில் நாமக்கல் மாவட்டத்தில் விஜய் உரையாற்றுவார் எனவும் அதன்பிறகு கரூர் மாவட்டத்தில் மாலை 3 மணி அளவில் உரையாற்றுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வரும் அக்.11 முதல் மதுரையில் இருந்து சுற்றுப்பயணம்: நயினார் நாகேந்திரன்

சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது, அக்டோபர் 11 ஆம் தேதி மதுரையில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்குவதாக தெரிவித்தார். அமித்ஷா – இபிஎஸ் சந்திப்பு குறித்து எதுவும் பேசவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். விஜய்க்கு கூட்டம் வருவதை வைத்து திமுகவுக்கு நேரடி போட்டி என் சொல்ல முடியாது என தெரிவித்தார். “விஜய் உரிய தரவுகள் எதுவும் இல்லாமல் பேசி வருவதாகவும் அவர் சாடினார்.

தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண் எடுத்தால் ரூ.10 ஆயிரம் பரிசு!!

பள்ளிக் கல்வித்துறை சார்பாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி பொதுத் தேர்வுகளில் தமிழ்ப் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெறும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். மேலும், கடந்த பொதுத்தேர்வில் தமிழில் முழு மதிப்பெண் பெற்ற 142 மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது என கூறினார்.

மின்சாரம் தாக்கி மின்மோட்டார் ஆபரேட்டர் பலி!!

மதுராந்தகம் அருங்குணத்தில் ஊராட்சி குடிநீர் கிணற்று டேங்க் ஆபரேட்டர் மாணிக்கம் மின்சாரம் தாக்கி பலியானார். மின்மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் தாக்கி மாணிக்கம் உயிரிழந்தார்.

1,156 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை கலைவாணர் அரங்கம் வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளியில் பயின்ற, 1,156 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 75 துணை செவிலியர் பணியிடங்களுக்கும் பணி நியமன ஆணையை வழங்கினார் முதலமைச்சர்.

அமெரிக்காவில் இண்டியானா மாகாணத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழப்பு!!

அமெரிக்காவில் இண்டியானா மாகாணத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். வாகன நிறுத்துமிடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் படிக்கும் ஆர்வம் 46% குறைந்தது!!

அமெரிக்காவில் படிக்கும் ஆர்வம் மாணவர்களிடையே ஒரே ஆண்டில் 46% குறைந்தது. அரசியல் நிலவரங்களால் அமெரிக்கா, கனடா நாடுகளுக்கு படிக்க செல்வது குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் அமெரிக்காவில் படிப்பது தொடர்பாக கல்வி விசாரணை 46% சரிவடைந்துள்ளது.

மறைந்த நடிகர் எம்.ஆர். ராதாவின் மனைவி கீதாவின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

மறைந்த நடிகர் எம்.ஆர். ராதாவின் மனைவி கீதாவின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களுடைய மனைவி திருமிகு. கீதா ராதா அவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பிரிவால் வாடும் சகோதரி திருமிகு.ராதிகா சரத்குமார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்."இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் உயர்ந்திருந்த கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி!!

சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் உயர்ந்திருந்த கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் விலை 69 அமெரிக்க டாலரில் இருந்து 65 டாலராக சரிவடைந்துள்ளது. இந்திய சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ரூ.5800-ல் இருந்து ரூ.5380 ஆக குறைந்தது.

சென்னையில் பல்வேறு இடங்களில் மழை!!

சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. வளசரவாக்கம், விருகம்பாக்கம், வடபழனி பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நுங்கம்பாக்கம், வள்ளுவர்கோட்டம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

வால்பாறையிலும் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஊட்டி, கொடைக்கானல் போன்று வால்பாறையிலும் நவம்பர் 1 முதல் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த, அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊட்டி, கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது தொடர்பாக வரும் டிசம்பரில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., குழு நீதிமன்றத்தில் பதில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!!

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், ஈரோடு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, நீலகிரி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 42 கட்சிகளின் பதிவு ரத்து: தேர்தல் ஆணையம் உத்தரவு!!

தமிழ்நாட்டில் உள்ள 42 கட்சிகளின் பதிவுகளை ரத்து செய்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு அளித்துள்ளது. 2019 முதல் தொடர்ச்சியாக 6 ஆண்டுகளாக தேர்தலில் பங்கேற்காமல் இருந்த கட்சிகளின் பதிவுகள் ரத்து செய்தது. தேர்தல் செலவின கணக்குகளை தாக்கல் செய்யாத கட்சிகளின் பதிவுகளையும் ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்!!

நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர், சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி சினிமாவுக்கு வந்தார். விஜய், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்தவர் ரோபோ சங்கர்.

சென்னையில் பல்வேறு இடங்களில் பெய்து வரும் கனமழையால் விமான சேவைகள் பாதிப்பு!!

சென்னையில் பல்வேறு இடங்களில் பெய்து வரும் கனமழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு வந்த 10 விமானங்கள், தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன. கொச்சி, தூத்துக்குடி, மும்பை, டெல்லி உள்ளிட்ட 10 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 15 விமானங்கள் ஒரு மணி நேர தாமதத்துக்கு பிறகு புறப்பட்டன.

பரமக்குடி அருகே மின்னல் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!!

பரமக்குடி அருகே பார்த்திபனூரில் மின்னல் தாக்கி கட்டட தொழிலாளி ரமேஷ் உயிரிழந்தார். மழைக்கு ஒதுங்கி மரத்தின் கீழ் நின்றபோது மின்னல் தாக்கியதில் ரமேஷ் (35) உயிரிழந்தார்

கமுதி அருகே சரக்கு வாகனம் மோதி 2 பேர் உயிரிழப்பு!!

சாயல்குடி-கமுதி சாலையில் மீன் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் மோதி 2 பேர் உயிரிழந்தனர். மீன் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனமும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. ஒளிக்குறி உணரி வகை தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்வுக்கான அனுமதி சீட்டு www.tnpsc.gov.in, www.tnpscexams.in ல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்தில் 3 கிலோ தங்க நகை கொள்ளை: 48 மணி நேரத்தில் கைது!!

சேலம் சங்ககிரியில் ஆம்னி பேருந்தில் 3 கிலோ நகைகளை திருடிய வழக்கில் 48 மணி நேரத்தில் போலீசார் இருவரை கைது செய்தனர். மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில் குமாரை சந்தித்து தங்க நகை உற்பத்தியாளர் சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர். இருவரைம் கைது செய்த போலீசார் ரூ.4 கோடி மதிப்புள்ள 3 கிலோ 150 கிராம் நகைகளை மீட்டனர். சில ஆண்டுகளுக்கு முன்பு நகைக்கடையில் பணிபுரிந்த பாலசுப்பிரமணியன் கொள்ளையை அரங்கேற்றியுள்ளார்.