புதிய வாகனம் வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!
சேவைக் குறைபாடு காரணமாக நுகர்வோருக்கு புதிய இரு சக்கர வாகனம் மற்றும் ரூ.10,000 இழப்பீடு வழங்க விற்பனையாளருக்கு தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. ;
கோப்பு படம்
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியைச் சார்ந்த லெவின் மரியான்ஸ் என்பவர் வீரபாண்டியன்பட்டினத்திலுள்ள இரு சக்கர வாகன விற்பனையாளரிடம் ஒரு பைக் வாங்கியுள்ளார். வாங்கிய நாளன்றே வாகனத்தின் இஞ்சினிலிருந்து சத்தம் கேட்டதனால் மனுதாரர் அன்றைய தினமே புகார் தெரிவித்துள்ளார்.
எதிர்மனுதாரர் சர்வீஸ் ஸ்டேசன் மூலம் வாகனத்தின் சத்தத்தை நிறுத்த முயற்சி செய்துள்ளார். ஆனால் முடியவில்லை. வாகனத்தின் உற்பத்திலேயே குறைபாடு உள்ளதால் மன உளைச்சலுக்கு ஆளான லெவின் மரியான்ஸ் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் பழுதான இரு சக்கர வாகனத்திற்கு பதில் புதிய இரு சக்கர வாகனம் அல்லது அதற்காக செலுத்தப்பட்ட தொகையான ரூபாய் 1,37,000 மற்றும்; வழக்கு செலவுத் தொகை ரூபாய் 10,000 ஆகியவற்றை இரு மாத காலத்திற்குள்; வழங்க வேண்டும் என உத்திரவிட்டனர்.