ராமநாதபுரம் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.
ராமநாதபுரத்தில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்
ராமநாதபுரம் ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் சார்பாக இன்று மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில், ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து இன்று ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தினர் ஏராளமானோர் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்கள், குறைந்தபட்ச கூலி சட்டத்தின் படி வெளியிட்ட அரசாணை படியும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படியும், ஆபரேட்டர்களுக்கு மாதம் தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு மாத ஊதியம் வழங்கிடவும், ஊராட்சிகளில் பணியில் புரியும் ஆப்ரேட்டர், தூய்மை காவலர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிடவும், ஊராட்சிகளில் உள்ள ஆபரேட்டர், தூய்மை பணியாளர்களின் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும், ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு நிலுவைத் தொகையை சரியான முறையில் கணக்கீடு செய்து வழங்கிடவும் மற்றும் கொரோனா காலத்தில் பணி செய்த ஊராட்சி பணியாளர்களுக்கு அரசு அறிவித்த மூன்று மாத ஊக்கத்தொகை ரூபாய் 15 ஆயிரம் வழங்கிட கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என அனைவரும் கலந்து கொண்டு கோசங்கள் எழுப்பினர்.