பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை
அமைதி பேச்சு வார்த்தையை புறக்கணித்த அரசு அதிகாரிகள்
பல்லடம் அருகே 60 ஆண்டுகளுக்கு மேலாக இனாம் ஒழிப்புச் சட்டத்தின் படி நில உரிமை பெற்று குடியிருந்து வரும் வீட்டு உரிமையாளர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்லி இந்து சமய அறநிலையத்துறையினர் வீடுகளை அகற்றும் முயற்சியில் ஈடுபட இருந்தனர். இதனை கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் இனாம் நில விவசாயிகள், குத்தகையாளர்கள், வீடு-மனை உரிமையாளர்கள் இயக்கத்தின் சார்பாக தொடர் காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து பல்லடம் வட்டாட்சியர் தலைமையில், மாவட்ட காவல் துறையால் அமைதி பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி, இனாம் நில விவசாயிகள், குத்தகையாளர்கள், வீடு-மனை உரிமையாளர்கள், அறநிலையத்துறையால் பாதிப்புக்கு உள்ளான பல்லடம், மாணிக்காபுரம் ரோடு, பெரியார் நகரை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் 20 க்கும் மேற்பட்டோர் அமைதி பேச்சு வார்த்தையில் கலந்துகொண்டனர். அறநிலையத்துறையின் சார்பாக அதிகாரிகள் யாரும் கலந்துகொள்ளாததால் பல்லடம் வட்டாட்சியர் அவர்களால் அமைதி பேச்சு வார்த்தை வேறு ஒரு தேதியில் நடத்தபடுவதாய் அறிவிக்கப்பட்டது.