கள்ளிமேடு முதல் பனப்பாளையம் வரை விபத்துகளை ஏற்படுத்தும் சாலையோர முட்செடிகள் அகற்றும் பணி தொடங்கியது
மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை
பல்லடம் அருகே கணபதிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட கள்ளிமேட்டில் இருந்து பனப்பாளையம் வரை செல்லும் சாலை எப்பொழுதும் போக்குவரத்து நிறைந்த சாலையாகும். இந்த சாலையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. பொதுமக்கள் இந்த சாலையை பல்லடம் செல்லும் மாற்று சாலையாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் அதிக அளவில் முட்புதர்கள் படர்ந்துள்ளதால் சாலையின் எதிரில் வாகனங்கள் வரும் போது தெரிவதில்லை. இதனால் தினந்தோறும் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் வாகன நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பொதுமக்கள் புகார் அளித்தனர்.அதனை தொடர்ந்து பல்லடம் மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக விபத்துகளை ஏற்படுத்தும் சாலையோர முட்செடிகளை அகற்ற பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.