மொபைல்போன் டவர் அகற்ற கோரிக்கை

கோரிக்கை

Update: 2024-08-27 01:32 GMT
திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ., நகரில் முறிந்து விழும் நிலையில் இருக்கும் மொபைல்போன் கோபுரத்தை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ., நகரில் 20 ஆண்டுகளுக்கு முன்பு மொபைல்போன் காலூன்றிய காலகட்டத்தில் தனியார் நிறுவனத்தின் சார்பில், மொபைல்போன் கோபுரம் அமைப்பதற்கான விதிமுறைகள் ஏதும் இல்லாத காலகட்டத்தில், குடியிருப்புகளுக்கு மத்தியில் மிக உயரமான மொபைல்போன் கோபுரம் அமைக்கப்பட்டது.தற்பொழுது இதன் ஆயுட்காலம் நிறைவடைந்து விட்டதாக கூறப்படும் சூழலில், முறையான பராமரிப்பு இல்லாததால்,மொபைல்போன் கோபுரத்தின் கீழ் பகுதி பலமிழந்து, புதர் மண்டி எப்பொழுது விழுமோ என்ற ஆபத்தான சூழலில் உள்ளது.குரங்குகள் கோபுரத்தின் மீது ஏறி ஆட்டும் பொழுது அருகில் குடியிருப்போர் முறிந்து விழுந்து விடுமோ என்ற அச்சத்துடன் உள்ளனர். புயல் உள்ளிட்ட பலமான காற்று வீசினால் கோபுரம் சாய்ந்தால் அருகில் இருக்கும் பல வீடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால், பலம் இழந்த இந்த மொபைல்போன் கோபுரத்தை அகற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கடிதம் எழுதியும் நடவடிக்கை இல்லை. பேராபத்து நிகழும் முன்பு மொபைல்போன் கோபுரத்தை அகற்றும் நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட தொலைதொடர்பு நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Similar News