அறநிலையத்துறை அமைச்சரே காவி வேட்டி கட்டியது எங்களுக்கு பெரிய வெற்றி

Update: 2024-08-31 13:04 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பரசலூர் கிராமத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான பழமை வாய்ந்த வீரட்டேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பின்னர், மதுரை ஆதீனம் 293-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹரஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் செய்தியாளர்களிடம் கூறியது: முத்தமிழ் மாநாட்டிற்கு என்னை அழைத்தவர் தீனா மூனா கட்சியை சேர்ந்தவர். தீனா.மூனா கட்சியில் இருந்தால் கறை வேஷ்டிதான் கட்டவேண்டும். இதுவரை இருந்த இந்து அறநிலையத் துறை அமைச்சரிலேயே எல்லாம் கரை வேட்டி கட்டிய அமைச்சரைதான் பார்த்து இருப்போம். இவர் எங்களுடன் சேர்ந்து காவி வேட்டி கட்டிவிட்டார் அமைச்சர் சேகர்பாபுதான். இது எங்களுக்கு பெரிய வெற்றி. கட்சி கறை வேஷ்டி கட்டியவரை காவி வேஷ்டி கட்ட வைத்தது முத்தமிழ் மாநாடு. அனைவருக்கும் சிறப்பு செய்துள்ளார். தருமை ஆதீனத்தில் தான் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடியுள்ளனர். மகா வித்வான் தண்டபாணி தேசிகர்தான் கலைஞரின் ஆசான். அவர் வந்த உடனே அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தார். ஒரு ஆதீனம் தண்டபாணி தேசிகரை உருவாக்கியது. அவர்தான் கலைஞர் கருணாநிதியை உண்டாக்கினார். தருமை ஆதீனம் ஒரு சம்பிரதாயம் கருதிதான் பல்லக்கில் ஏறுகிறார். எங்கள் ஆதீனம் நடக்கவும் செய்வார். பல்லக்கு அவருக்கு ஒரு பொருட்டல்ல. நடக்கவும் செய்வார், பல்லக்கிலும் ஏறுவார். அதை அமைச்சர் புரிந்து கொள்வார். இந்த கோயிலில் எனக்கு பேச வாய்ப்பு இல்லை, இந்த கோவிலுக்கு கூட குத்தகைதாரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். கோயில் குத்தகையை கேட்டால் குத்துவதற்கு கைதான் வருகிறது. கோயில் குத்தகை வழங்காதவர்களிடம் வசூல் செய்ய அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே அமைச்சர் சட்டம் என்னும் சாட்டையை எடுத்து சுழற்றி யாராக இருந்தாலும், எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களிடமிருந்து கோயில் வழிபாட்டுக்குரிய குத்தகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுத்தால் சேகர்பாபு நம் பாபுவாக இருப்பார். ஆன்மீக பணியில் தமிழ்நாடு அரசு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு அதை எல்லாம் கேட்காதீங்க இதோட என்னை விட்டு விடுங்கள் என்று நழுவிச் சென்றார்.

Similar News