மங்கலம்பேட்டை அருகே மருமகனை தாக்கி, கொலை மிரட்டல்.
மாமனார், மைத்துனர் கைது
விருத்தாசலம் அடுத்த மங்கலம் பேட்டை அருகே, எம்.பரூர் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பஞ்சமூர்த்தி மகன் தினேஷ் (24) இவர், தனது மனைவி ஆரோக்கியலின்சி மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக அதே ஊரில், புதுமனை தெருவில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு தினேஷ் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், தினேஷின் மாமனார் ஜேசுதாஸ் மகன் அந்தோணி ராஜ் (47), இவரது மகன் ஆல்வின் சுசி, அந்தோணி ராஜ் மனைவி விண்ணரசி மற்றும் தினேஷ் மனைவி ஆரோக்கியலின்சி ஆகியோர் தினேஷை அசிங்கமாக திட்டி, கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில், அந்தோணி ராஜ், ஆல்வின் சுசி ஆகிய 2 பேர் மீதும் மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர்.