தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா
நகர மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மையே சேவை என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் செப்டம்பர் 17 முதல் தொடங்கி அக்டோபர் 2 வரை நடைபெற்று வருகிறது. இதில் திடக்கழிவு மேலாண்மை பணி மக்கும் குப்பை மக்காத குப்பை என குப்பைகளை தரம் பிரித்து வழங்குதல் மரக்கன்றுகள் நடுதல் திறந்த வெளி மலம் கழித்தலை தடுத்தல் பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று நடந்த நிகழ்ச்சியில் விருத்தாசலம் நகர மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் விருத்தாச்சலம் நகராட்சிக்கு உட்பட்ட சின்னவடவாடி நுண் உரமாக்கல் மையத்தில் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து பொதுமக்களையும் மரக்கன்றுகள் நட்டு சுற்றுச்சூழலை பேணிக் காக்குமாறும் நகரின் தூய்மையை பராமரிப்பதில் மக்கள் ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இதில் துப்புரவு அலுவலர் சக்திவேல், சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், தூய்மை பணி மேற்பார்வையாளர்கள், களப்பணி உதவியாளர்கள், ஒப்பந்த தூய்மை பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் மற்றும் பரப்புரையாளர்கள் உள்ளிட்ட நகராட்சியினர் பலர் உடன் இருந்தனர்.