சிலிண்டர்களை பயன்படுத்தி மீன்பிடிக்க தடை:மீனவர்கள் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் கடல்வளத்தை அழித்திடும் வகையில், நைட்ரஜன் சிலிண்டர்களை பயன்படுத்தி மீன்பிடிக்க முற்றிலுமாக தடை விதிக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-09-24 08:57 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி மாவட்டத்தில் கடல்வளத்தை அழித்திடும் வகையில், நைட்ரஜன் சிலிண்டர்களை பயன்படுத்தி மீன்பிடிக்க முற்றிலுமாக தடை விதிக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தூய ஆவி நாட்டுப்படகு மீனவர்சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில், "பாரம்பரியமாக தூண்டில் மூலம் கணவா மீன் பிடிக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் சங்குளிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். உயிர்ப்பில்லாத வெள்ளை சங்குகளை மட்டும் எடுக்கிறோம் என கூறிக்கொண்டு சட்டவிரோதமாக நைட்ரஜன் சிலிண்டர்களை பயன்படுத்தி (Air compressor) மன்னார் வளைகுடா பகுதி அரிதான பவளப்பாறைகளை சேதப்டுத்தி உயிருடன் உள்ள மீன் இனங்களை குரையாடுகின்றனர். குறிப்பாக கணவா மீன்கள் பவளப்பாறைகளை சுற்றியே முட்டையிட்டு குஞ்சுகளை பொறிக்கும் ஆனால் இவர்கள் அதன் இனப்பெருக்க இடத்திற்கே கடலுக்குள் சென்று கணவா மீன்களை அதிகளவில் வேட்டையாடுகின்றனர். இதனால் பாரம்பரியமாக தூண்டில் தொழிலில் கணவா மீன்களை பிடித்து வயிற்றுபிழைப்பு நடத்திவரும் எங்களைப்போன்ற சிறுதொழில் மீனவர்கள் முற்றிலுமாக வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். இதுகுறித்து நாங்கள் ஏற்கனவே தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் நேரடியாக முறையிட்டு எங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்திருந்தோம். ஆனால் அதையும் மீறி இன்றளவும் கணவா மீன்களை கடலுக்குள் இறங்கி பிடித்து வருகின்றனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் சுமார் 4000 ஆயிரம் மீனவ குடும்பங்கள் பட்டினியில் தள்ள நேரிடும். ஆனால் தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் புகாரளித்த எங்களையே சங்குளி நபர்கள் கடலில் சட்டவிரோதமாக கணவா மீன்களை பிடிப்பதை புகைப்படம் எடுக்க சொல்கிறார். அவர்களது அறிவுரைப்படி நாங்கள் செயல்பட்டல் கடலில் தேவையற்ற சச்சரவு மீனவர்களிடையே ஏற்பட்டு சட்ட ஒழுங்கு மோசமாகவே மாறும் நிலை வரும் அரசு அனுமதிக்காத ஒரு தொழிலை (நைட்ரஜன் சிலிண்டர் மூலம் )மறைமுகமாக ஆதரித்து தூத்துக்குடி மீன்வளத்துறை அதிகாரிகள் சட்டவிரோதமாக கடல்வளங்களை அழித்துக்கொண்டிருக்கும் நபர்களுக்கு ஆதரவாகவே செயல்படுகிறார்கள். ஆகவே மாவட்ட ஆட்சியர் ஐயா அவர்கள் உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு பாரம்பரியமாக கடல்வளத்திற்கு பாதிப்பில்லாமல் தொழில் செய்துவரும் கணவா மீன் பிடி தொழிலாளர்களை காக்கும் விதமாக சட்டவிரோத தொழிலில் ஈடுபடும் சங்குளி தொழிலாளர் போர்வையில் கடல்வளத்தை அழித்துக் கொண்டிருக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்து சிலிண்டர் தொழிலை நமது மாவட்டத்தில் முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News