தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா தலைமையில் தூய்மையே சேவை இயக்கத்தின் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2024-09-24 13:54 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பொம்மசமுத்திரம் ஊராட்சி சமுதாய கூடத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி அவர்கள் முன்னிலையில் தூய்மையே சேவை இயக்கத்தின் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் தூய்மை பணியாளர்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். தூய்மை பணியாளர்களுக்கு ரூ.5.00 இலட்சம் வரை விபத்து காப்பீட்டு திட்டம், ரூ.1.00 இலட்சம் வரை பணியிடத்து விபத்து காப்பீட்டு திட்டம், இயற்கை மரண உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, உயர்கல்வி பயில மாதம் ரூ.1,000/- வழங்கும் புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், அரசுப்பள்ளிகளில் காலை உணவு திட்டம், திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவி, கண் கண்ணாடி உதவித்தொகை மற்றும் முதியோர் ஓய்வூதியம் திட்டம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும், தூய்மையே சேவை 2024 இயக்கம் 17. 09.2024 முதல் 02.10.2024 வரை நடைபெற்று வருகிறது. இவ்வியக்கத்தின்போது, பொதுமக்கள் பங்கேற்புடன் தூய்மைப்படுத்துதல் மற்றும் உறுதிமொழி எடுத்தல், பொதுமக்களிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஈடுபாட்டுடன் வீடுகள் மற்றும் கடைகள் தோறும் திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வு மேற்கொள்ளுதல், தூய்மை பாரத இயக்க கட்டமைப்புகளை புதுப்பித்தல், தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மூலம் மருத்துவ பரிசோதனை நடத்துதல், பள்ளிகளில் சுகாதாரம் தொடர்பான போட்டிகள் நடத்துதல், கிராம சபா நடத்துதல், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் சுகாதார ஊக்குநர்களை கௌரவித்தல், மற்றும் இவ்வியக்கத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊராட்சிகளுக்கு பரிசளித்தல், போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மேற்கண்ட நிகழ்வுகள் யாவும் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் இன்றைய தினம் தூய்மை பணியாளர்களுக்கான ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு தூய்மையே சேவை இயக்கத்தின் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது. இம்மருத்துவ முகாமில் இரத்த அழுத்தம், சர்க்கரை, புற்றுநோய், தோல் நோய், இருதய நோய் மற்றும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. நீங்கள் அனைவரும் தங்களது ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளித்திட வேண்டும். தூய்மை பணியாளர்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள கையுறை, முககவசம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும். அடிப்படை ஆரோக்கியத்தை பாதுகாத்திட முன்வர வேண்டும். அனைவரும் மருத்துவ காப்பீடு அட்டைகளை விண்ணப்பித்து பெற்று கொள்ள வேண்டும். இதன் மூலம் ஆண்டிற்கு ரூ.5.00 இலட்சம் வரை மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ள முடியும். மேலும், தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக தங்களை பதிவு செய்து கொண்டு அரசின் திட்டங்களை முழுமையாக பெற்று பயன்பெற வேண்டும். நாமக்கல் மாவட்டத்தை நோய்தொற்று இல்லா மாவட்டமாக உருவாக்கிட ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். தொடர்ந்து, சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்ப்பட்ட 14 ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை பாராட்டும் விதமாக பரிசுப்பொருட்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மேலும், தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவினையும் பரிமாரினாளர்.மேலும், தூய்மையே சேவை 2024 சுகாதார உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சு.வடிவேல் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News