ராசிபுரம் அருகே 80 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு
ராசிபுரம் அருகே 80 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள குட்டலாடம்பட்டி பகுதியில் 80 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த 78 வயதான மூதாட்டியை ராசிபுரம் தீயணப்பு நிலைய மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டு முதலுதவிக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குட்டலாடம்பட்டி பகுதியை சேர்ந்த மெய்வேல்(83) என்பவரது மனைவி ராசம்மாள் (78) கணவரை இழந்த இவர் தனியாக வசித்து வந்தார். இவர் செவ்வாய்க்கிழமை மாலை குட்டலாடம்பட்டி கிராமத்தில் மழை பெய்த நிலையில் மூதாட்டி ராசம்மாள் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அவருக்கு சரிவர பார்வை தெரியாத நிலையில் நடந்து சென்ற போது அவர் அப்பகுதியில் 40 அடி அகலம், 50 அடி நீளம், 80 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்ததாகத் தெரிகிறது. கிணற்றில் 5 அடி மட்டும் தண்ணீர் இருந்த நிலையில், தவறி விழுந்த மூதாட்டி நீரில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இது குறித்து ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் நிலைய அலுவலர் வெ.பலகார ராமசாமி, நிலைய சிறப்பு நிலைய அலுவலர் ஏழுமலை ஆகியோர் தலைமையில் அங்கு விரைந்த சென்ற மீட்புக்குழுவினர் மூதாட்டியை கயிறு கட்டி மீட்டு முதலுதவிக்கு ராசிபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.