சொத்து தகராறில் மகனை அடித்துக் கொன்ற தந்தை உட்பட இரண்டு பேர் கைது

குற்றச்செய்திகள்

Update: 2024-09-28 04:23 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, சொத்து கேட்டு தகராறு செய்த மகனை அடித்துக் கொன்ற தந்தை உள்ளிட்ட 2 பேரை போலீஸார் கைது செய்தனர். அறந்தாங்கி அருகே ஆவணத்தான்கோட்டை வாடிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (56). இவருக்கு இன்பரசன் (24), இயலரசன் (20) என இரு மகன்கள். மூத்த மகன் இன்பரசன் கடந்த 2 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை பார்த்துவிட்டு, மூன்று மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். தொடர்ந்து, சொத்தில் தனக்கான பங்கைக் கேட்டு தந்தை செல்வராஜிடம் அடிக்கடி மதுபோதையில் அவர் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. வியாழக்கிழமை இரவு செல்வராஜ், தனது நண்பர் உலகநாதன் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இந்த நேரத்தில், தந்தை செல்வராஜை தேடி, இன்பரசன் அங்கு வந்துள்ளார். மீண்டும் சொத்து கேட்டு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அனைவரும் மது போதையில் இருந்ததால் கைகலப்பாகவும் மாறியது. இதில் தந்தை செல்வராஜுவும், அவரது நண்பர் உலகநாதனும் சேர்ந்து இன்பரசனை சுத்தியலால் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.இதில் தலையில் பலத்த காயமடைந்த இன்பரசன் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த அறந்தாங்கி போலீஸார், அந்த இடத்துக்குச் சென்று, இன்பரசனின் உடலைக் கைப்பற்றி, கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அறந்தாங்கி போலீஸார், மகனை அடித்துக் கொன்ற தந்தை செல்வராஜுவையும், அவரது நண்ப உலகநாதனையும் வெள்ளிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அறந்தாங்கி கிளைச் சிறையில் அடைத்தனர்.

Similar News