நாமக்கல்லில் லாரி பட்டறைகள் கோழிப் பண்ணைகளில் ஆயுதபூஜை கொண்டாட்டம் களை கட்டியது!
இயந்திரங்களுக்கு விபூதி-சந்தனம்- குங்குமம் வைத்து, வளாகம் முழுவதும் மலர்களால் அலங்கரித்து, கலர் காகிதம் மற்றும் மாவிலை தோரணங்கள் கட்டி, வாழைக் கன்றுகள்,கரும்புகள் நடப்பட்டன. லாரிகள், இருசக்கர வாகனங்கள் சுத்தம் செய்யப்பட்டு, மாலைகள் சூட்டி அழகுபடுத்தினர்.
நாடு முழுவதும் நவராத்திரி விழா, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. போக்குவரத்து மற்றும் கோழிப்பண்ணைகள், கல்வி நிறுவனங்களுக்கு புகழ்பெற்ற நாமக்கல் நகரில் ஆயுதபூஜை பக்தி சிரத்தையுடன் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.முன்னதாக, கடந்த 2 நாள்களாக, லாரி மற்றும் இருசக்கர வாகன பணிமனைகள், கோழிப்பண்ணை அலுவலகங்கள், சரக்கு வாகன அலுவலகங்கள், தொழிற் சாலைகளில்,, தங்கள் தொழில்களுக்கு அன்றாடம் பயன்படுத்தக்கூடிய, இயந்திரங்கள், அலுவலகப் பொருட்கள் ஆகியவற்றை தொழிலாளர்கள் சுத்தப்படுத்தினர். ஆயுத பூஜை அன்று அந்தந்த நிறுவனங்களின் வாசல்களில், வண்ணக் கோலமிட்டு, தாங்கள் பணிபுரியும் இயந்திரங்களுக்கு விபூதி-சந்தனம்- குங்குமம் வைத்து, வளாகம் முழுவதும் மலர்களால் அலங்கரித்து, கலர் காகிதம் மற்றும் மாவிலை தோரணங்கள் கட்டி, வாழைக் கன்றுகள், கரும்புகள் நடப்பட்டன. லாரிகள், இருசக்கர வாகனங்கள் சுத்தம் செய்யப்பட்டு, மாலைகள் சூட்டி அழகுபடுத்தினர். அதனைத் தொடர்ந்து, தொழில்களுக்கு பயன்படுத்தும் கருவிகள், பதிவேடுகளை வைத்து, சிறப்பு பூஜை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நாம் செய்யும் தொழில்களும் தொழிலாளர்களும், சிறப்பாக நலமுடன் இருக்க வேண்டும் என வேண்டி ஆயுத பூஜையானது பக்தி சிரத்தையுடன், வழிபாடு செய்து, உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பூஜையை தொடர்ந்து, தொழிலாளர்கள் பொதுமக்கள் ஆகியோருக்கு, பொங்கல், சுண்டல், கடலை-பொரி ஆகிய பிரசாதங்கள் வழங்கப்பட்டன.