மேலை நாடும் இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு

சிவகங்கை மாவட்டத்தில் வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது;

Update: 2025-02-10 12:15 GMT
சிவகங்கை மாவட்டம், வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், வருகின்ற 14.02.2025 அன்று, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு,ஒவ்வொரு மாதமும் இரண்டாம் அல்லது மூன்றாம் வெள்ளிக்கிழமையன்று சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி, வருகின்ற 14.02.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணி அளவில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில், வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைநாடுநர்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினைப் பெறலாம். மேலும், இம்முகாமில் இலவச திறன்பயிற்சிக்கான விண்ணப்பபடிவம், போட்டித்தேர்வுகளுக்கான இலவசப்பயிற்சி வகுப்பில் மாணவர் சேர்க்கை, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவம் ஆகியவையும் வழங்கப்படும். எனவே, விருப்பமுள்ளவர்கள் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்த இளைஞர்கள் தங்களது கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இம்முகாமில் பணிவாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ஏதும் ரத்து செய்யப்படமாட்டது. எனவே வேலைநாடுநர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Similar News