ஜி.பி.எஸ்., மூலம் கண்டுபிடித்த உரிமையாளர்

உரிமையாளர்;

Update: 2025-02-22 04:33 GMT
ஆந்திரா மாநிலம் அன்னமய்யா மாவட்டம், குர்ரம்குண்டா அடுத்த பாலகுண்டபாரி பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கங்காதரன்,35; லாரி உரிமையாளர். இவரிடம் சித்துார் அடுத்த வாயல்பாடு பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்ராஜ பள்ளி, 35; டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர், கடந்த 17ம் தேதி, ஆந்திராவில் இருந்து லாரியில் காபி கொட்டையை ஏற்றிச் சென்று திண்டுக்கல்லில் இறக்கிவிட்டு, அங்கிருந்து சோயா சாஸ் லோடு ஏற்றிக்கொண்டு, துறையூரிலும், உளுந்துார்பேட்டையிலும் இறக்கினார்.இந்நிலையில் கங்காதரன் நேற்று முன்தினம் ஜி.பி.எஸ்., கருவி மூலம் லாரி எங்கு இருக்கிறது என பார்த்தபோது வெகு நேரமாக உளுந்துார்பேட்டையில் நிறுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. சந்தேகமடைந்த கங்காதரன், டிரைவருக்கு போன் செய்தபோது போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. கங்காதரன் நேற்று மதியம் 1:45 மணிக்கு உளுந்துார்பேட்டை அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகே லாரி நின்ற இடத்திற்கு வந்தார். டிரைவர் வெங்கடேஷ் ராஜபள்ளியை தேடியபோது, அருகில் உள்ள உளுந்துார் ஏரியில் இறந்து கிடப்பதை கண்டு திடுக்கிட்டு, போலீசருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று, வெங்கடேஷ் ராஜபள்ளி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

Similar News