கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்து
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நாளை ஆர்ப்பாட்டம்;
கட்டுமான தொழிலுக்கு பயன்படும், பி சாண்ட், எம் சாண்ட், ஜல்லி, அரளை உள்ளிட்ட பொருட்களின் கடுமையான விலையேற்றத்தை கண்டித்து, கட்டுமான பொறியாளர்கள், ஒப்பந்தக்காரர்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. அதன்படி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கூட்டமைப்பின் சார்பில், நாகை இந்திய வர்த்தக தொழில் குழும கூட்டரங்கத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கட்டுமான பொருட்கள் விலையேற்றதிற்கு காரணமான கிரஷர் கம்பெனிகளை கண்டித்தும், தமிழக அரசு விலையேற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில், நாளை (புதன்) நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை 2 ஆயிரம் ரூபாய் அதிகமாக விற்பனை செய்வதால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்தனர்.