இந்தி திணிப்பை கண்டித்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பினர்
கோட்டை பகுதியில் ஆர்ப்பாட்டம்;
தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பின் சேலம் மத்திய மாவட்டம் சார்பில் மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை திணித்து மீண்டும் மொழிப்போருக்கு மத்திய அரசு நிர்ப்பந்திப்பதாக கூறி அதை கண்டித்து கோட்டையில் உள்ள ஸ்டேட் வங்கி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க. மாணவரணி மாவட்ட அமைப்பாளர் கோகுல் காளிதாஸ், மாநகர அமைப்பாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில துணை செயலாளர் தமிழரசன் கலந்து கொண்டு பேசினார். இதில் இந்தி மொழியை திணிப்பதாக கூறி மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் ‘கல்வி எங்கள் உரிமை, கல்வி மாநில உரிமை, 'எங்கள் பட்டங்கள் செல்லாது என சொல்ல உனக்கென அதிகாரம்?' என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கைகளில் ஏந்தி நின்றனர். ஆர்ப்பாட்டத்தில் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.