வேளாங்கண்ணி புனித செபஸ்தியார் ஆலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு
பெரிய தேர் பவனி - திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்;
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரம் ஊராட்சி பாலத்தடியில் பழமை வாய்ந்த புனித செபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின், ஆண்டுப் பெருவிழா கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. முன்னதாக, ஆலயத்தில் வேளாங்கண்ணி பேராலய பங்கு தந்தை அற்புதராஜ் அடிகளார் தலைமையில் சிறப்பு திருப்பலி, கூட்டுப்பாடல் பிரார்த்தனை, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து, மின் விளக்குகளால் அலங்கரிகப்பட்ட சப்பரத்தில் மைக்கல் சம்மனசு, புனித அந்தோனியார், புனித செபஸ்தியார் எழுந்தருள புனித நீர் தெளிக்கப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர்பவனியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதனைதொடர்ந்து, கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.