திருமருகல் ஒன்றியத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு
சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு;
மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரியில், சிவனை வழிபட்டால், ஓராண்டு முழுமையும் சிவபெருமானை வழிபட்டதற்கான பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு மகா சிவராத்திரியை முன்னிட்டு, திருமருகலில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவிலில், சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், இரவு 11 மணியளவில் 2-ம் கால பூஜை நடைபெற்றது. கோவிலில் உள்ள லிங்கத்துக்கு, மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் போன்ற திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல், திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவில், திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோவில், சியாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவில், விற்குடி விரட்டானேஸ்வரர் கோவில், தேவன்குடி தேவபுரீஸ்வரர், பழங்குடி ராஜராஜேஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.