தஞ்சை மாவட்டம், தென்னங்குடியில் வீட்டின் முன்பு கட்டி வைக்கப்பட்டிருந்த வெள்ளாட்டை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர் என முதியவர் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், தென்னங்குடி சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த செபஸ்தியார் மகன் சவரி முத்து (78). இவர் தான் வளர்க்கும் வெள்ளாட்டை வீட்டின் முன்பு கட்டி வைப்பது வழக்கம். வழக்கம் போல இரவு வீட்டின் முன்பு வெள்ளாட்டை கட்டி வைத்துள்ளார். மறுநாள் காலையில் பார்த்தபோது வெள்ளாட்டை காணவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் வெள்ளாட்டை கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் மதிப்பு ரூபாய் 5,000 எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து சவரிமுத்து கள்ளப் பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.