குடிபோதையில் காரை ஒட்டி விபத்து ஏற்படுத்தி மருத்துவர் என கூறி ரகளை ஈடுபட்டதால் பரபரப்பு
பல்லடம் அருகில் நொச்சிப்பாளையத்தில் குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தி விட்டு அரசு மருத்துவர் எனக்கூறி ரகளையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு.;
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நொச்சிபாளையம் பிரிவு என்ற இடத்தில் பல்லடம் திருப்பூர் சாலையில் வேகமாக வந்த கார் நிலை தடுமாறி எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. காரை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் உடனிருந்த இருவரும் மதுபோதையில் இருந்துள்ளனர். டிரைவர் அதே இடத்தில் மயக்கம் அடைந்த நிலையில் உடன் வந்த நபர் காரில் இருந்து கீழே இறங்க அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட முயன்றனர். போதையில் இருந்த அவர் தனது பெயர் தங்கராஜ் என்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் என்றும் போதையில் உளறினார். அத்துடன் இல்லாமல் "என்னை யார் கேட்பார்கள் கேட்க முடிந்தால் கேளுங்கள்" என போதை தலைக்கேறிய நிலையில் பிதற்றினார். அப்பகுதியினர் சிலர் போதை ஆசாமியிடம் மது குடித்துவிட்டு கார் ஓட்டி வந்ததுடன் என்னை யார் கேட்பார்கள் என்று கூறுவது நியாயமா? என்று கேட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த பல்லடம் காவல்துறையினர் விபத்து குள்ளான இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மது போதையில் இருந்த தங்கராஜ் என்பவர் குறித்து விசாரிக்கையில் இவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மருத்துவர் இல்லை என்பதும் நெகமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளர் என்றும் தெரியவந்தது. ஆனால் மது போதையில் வாகனத்தை இயக்கிய நபர்கள் மீது பல்லடம் காவல்துறையினர் இதுவரை எந்த வழக்கு பதிவு செய்யவில்லை . இந்த வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதடங்களில் பரவி வருகிறது.