உப்பள தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள
2960 தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்;

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. இத்தொழிலில், நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உப்பள பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு, தமிழக அரசு உப்பள தொழிலாளர்கள் நல வாரியம் அமைத்து பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. வேதாரண்யம் பகுதியில், 2960 உப்பள தொழிலாளர்கள் இந்த நல வாரியத்தில் உறுப்பினராக உள்ளனர். 60 வயது நிரம்பியவர்களுக்கு முதியோர் உதவி தொகை வழங்கும் திட்டத்தில், கைலவனம்பேட்டை சேர்ந்த நீலாவதி, மறைஞாயநல்லுரை சேர்ந்த அன்பழகன் ஆகிய இருவருக்கும் உப்பள தொழிலாளர்களின் நலவாரிய யத்தின் மூலம் முதியோர் உதவி தொகைக்கான ஆணையை, வேதாரண்யம் சிறு உப்பு உற்பத்தியாளர் இணைய தலைவர் புகழேந்தி வழங்கினார். தமிழக அரசின் உப்பள தொழிலாளர் நல வாரியத்தின் மூலம், மழைக்கால நிவரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக 2234 தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, 10 நபர்களுக்கு முதியோர் உதவித் தொகையும், 6 பேர் குடும்பத்திற்கு இறப்பு நிவாரண உதவித் தொகையும், திருமண உதவித்தொகை 10 நபர்களுக்கும், கல்வி உதவித் தொகை 500 குடும்பத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது என்று சிறுகுறு உப்பு உற்பத்தியாளர் இணைய தலைவர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.