மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் பழுது வரதர் கோவிலில் பணத்தை இழக்கும் பக்தர்கள்
வரதராஜ பெருமாள் கோவிலில் செயல்படாமல் உள்ள மஞ்சப்பை வழங்கும் தானிய இயந்திரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை எழுந்துள்ளது;
தமிழக அரசின், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில், ஆறு மாதங்களுக்கு முன், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம் அமைக்கப்பட்டது.இந்த இயந்திரத்தில், 10 ரூபாய் நாணயம் அல்லது நோட்டு செலுத்தினால், பக்தர்களுக்கு மஞ்சப்பை வழங்கும். இந்நிலையில், ஒரு மாதமாக இயந்திரம் பழுதடைந்த நிலையில் உள்ளது. செயல்படாமல் முடங்கி கிடக்கும் இயந்திரத்தை அப்புறப்படுத்தாமல் உள்ளதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், மஞ்சப்பை பெறுவதற்காக இயந்திரத்தில், 10 ரூபாய் செலுத்துகின்றனர். மஞ்சப்பை வராத நிலையில், பணத்தையும் இழந்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர். எனவே, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினர், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் செயல்படாமல் உள்ள மஞ்சப்பை வழங்கும் தானிய இயந்திரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.