சாலையில் திரியும் மாடுகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
நெடுஞ்சாலையில் விபத்துக்கு வழிவகுக்கும் வகையில் திரியும் மாட்டின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்;

பெங்களூரு -- சென்னை தேசிய நெடுஞ்சாலை, வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை, திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக, ஸ்ரீபெரும்புதுார் - - சிங்கபெருமாள் கோவில் சாலை உள்ளது.ஒரகடம், வல்லம், ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் பகுதிகளில் உள்ள நுாற்றுக்கணக்கான தொழிற்சாலைகளுக்கு, நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த நெடுஞ்சாலையில், வல்லம், வடகால், போந்துார் உள்ளிட்ட பகுதிகளில் மாடுகளை வைத்திருப்பவர்கள், மாடுகளை கொட்டகைளில் வைத்து பராமரிக்காமல், சாலையில் திரிய விடுகின்றனர். அவை கூட்டம் கூட்டமாக சாலைகளில் வலம் வருவதோடு, திடீரென சாலையில் குறுக்கும் நெடுக்கமாக ஓடுவதால், வேகமாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள், திடீரென சாலையின் குறுக்கே வரும் மாட்டின் மீது மோதி, விழுந்து காயமடைந்து வருவது வாடிக்கையாக உள்ளது. எனவே, நெடுஞ்சாலையில் விபத்துக்கு வழிவகுக்கும் வகையில் திரியும் மாட்டின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.