வால்பாறை: நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன் !
சிறுத்தை ஒன்று, நாய் குரைத்த சத்தம் கேட்டு ஆத்திரமடைந்து சிறுவனை நோக்கி பாய்ந்தது. ஆனால், நாயின் தொடர் குரைப்பால் நிலை தடுமாறிய சிறுத்தை, உடனடியாக அங்கிருந்து திரும்பிச் சென்றது.;

கோவை மாவட்டம் வால்பாறை அருகே ரொட்டிக்கடை உயர்நிலைப் பள்ளிக்கு மேற்புறம் வசித்து வரும் சிவக்குமார் - சத்யா தம்பதியரின் மகன் நேற்று முன்தினம் வீட்டின் முன்புறம் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென பலத்த நாயின் குரைப்புச் சத்தம் கேட்டது. அதே சமயத்தில் சிறுவனும் அலறியடித்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடிச் சென்றுள்ளான். சத்தம் கேட்டு பதறிப்போன பெற்றோர் வெளியே வந்து பார்த்தபோது, நாய்கள் மட்டும் தொடர்ந்து குரைத்துக் கொண்டிருந்தன. என்ன நடந்திருக்கும் என்ற அச்சத்துடன் சிறுவனின் தந்தை சிவக்குமார் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்தார். அப்போதுதான் அதிர்ச்சியான காட்சி பதிவாகியிருந்தது. வீட்டின் அருகே புதர் மறைவில் பதுங்கியிருந்த பெரிய சிறுத்தை ஒன்று, நாய் குரைத்த சத்தம் கேட்டு ஆத்திரமடைந்து சிறுவனை நோக்கி பாய்ந்தது. ஆனால், நாயின் தொடர் குரைப்பால் நிலை தடுமாறிய சிறுத்தை, உடனடியாக அங்கிருந்து திரும்பிச் சென்றது. இந்த அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தை குடியிருப்பு பகுதிக்குள் வந்தது குறித்து அச்சம் தெரிவித்துள்ள மக்கள், வனத்துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு சிறுத்தை ஊருக்குள் நுழைவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.