மக்கள் தொடர்பு திட்ட முகாமில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய எம்.பி கே.ஆர்.என் ராஜேஷ்குமார்.
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 334 பயனாளிகளுக்கு ரூ.1.84 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.;
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், மூலப்பள்ளிப்பட்டி கிராமத்தில் இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, தலைமையில், 334 பயனாளிகளுக்கு ரூ.1.84 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தெரிவித்தாவது தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு கடந்த 4 ஆண்டுகளில் அனைத்து தரப்பு மக்களுக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டுமென்ற உன்னத நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். குறிப்பாக பொதுமக்கள் அரசு அலுவலகங்களை தேடி தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கி வந்த நிலையில், பொதுமக்களை தேடி அனைத்து துறை அரசு அலுவலர்களும் அவர்களது கிராமங்களுக்கே சென்று கோரிக்கைகளை நிறைவேற்றிட மாதம் ஒரு முறை மக்கள் தொடர்பு திட்ட முகாமினை நடத்திட உத்தரவிட்டுள்ளார்கள். இம்முகாம்கள் மூலம் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனைபட்டா, தொழில் கடனுதவி, கூட்டுறவு துறை சார்பில் கடனுதவி, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு தீர்வு வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி, இன்றைய தினம் இராசிபுரம் வட்டம், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், மூலப்பள்ளிப்பட்டி கிராமத்தில் முகாம் நடத்தப்பட்டு, வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமுகநலத்துறை, மகளிர்திட்டம், கூட்டுறவுத்துறை, வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை, தாட்கோ மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் உள்ளிட்ட 14 அரசுத் துறைகளின் சார்பில், இலவச வீட்டுமனை பட்டா, இ.பட்டா, நத்தம் பட்டா மாறுதல் ஆணைகள், நத்தம் தோராய பட்டா, தையல் இயந்திரம், தொழில் கடன் உட்பட 334 பயனாளிகளுக்கு ரூ.1.84 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மேலும், பெண்களை பொருளாதார ரீதியாக உயர்த்திடும் வகையில் மகளிருக்கு மாதம் ரூ.1,000/-வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்தி வழங்கி வருகின்றார்கள். மேலும், விடுபட்ட மகளிருக்கு இன்னும் 3 மாத காலத்திற்குள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள். மகளிருக்கு பேருந்துகளில் கட்டணமில்லா இலவச விடியல் பயணம், உயர்கல்வி பயில வறுமை ஒரு தடையாக இருக்க கூடாது என்பதற்காக பெண்கள் உயர்கல்வி பயில்வதை ஊக்குவித்திட மாதம் ரூ.1,000/- வழங்கும் புதுமைப் பெண் திட்டம், மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000/- வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம், ஏழை, எளிய குழந்தைகளின் பசியினை போக்கிட பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்ட உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து மக்களுக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டுமென்ற உன்னத நோக்கத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்திடவும், வாழ்வாதாரத்தை உயர்த்திடவும் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்கள். பொதுமக்கள் அரசின் திட்டங்களை பயன்படுத்தி கொண்டு தங்கள் உடல்நலனையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்தி கொள்ள வேண்டும் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தெரிவித்தார். முன்னதாக வருவாய்த்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வனத்துறை, கூட்டுறவுத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை, பட்டு வளர்ச்சி துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சுற்றுலாத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் திட்ட விளக்க கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்ததை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பார்வையிட்டார். தொடர்ந்து, மக்கள் தொடர்பு திட்ட முகாமில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.1,000/- மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகங்கள், வேளாண்மை துறை சார்பில் 2 விவசாயிகளுக்கு ரூ.91,174/- மதிப்பில் நலத்திட்ட உதவிகள், வேளாண் பொறியியல் துறை சார்பில் 1 விவசாயிக்கு ரூ.2.27 இலட்சம் மதிப்பில் பவர் டில்லர், மகளிர் திட்டம் சார்பில் 10 நபர்களுக்கு ரூ.3.00 இலட்சம் மதிப்பில் மகளிர் சுய உதவிக்குழு கடனுதவி, தாட்கோ சார்பில் 8 நபர்களுக்கு ரூ.46.15 இலட்சம் மதிப்பில் தொழில் கடனுதவி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.13,400/- மதிப்பில் திரவ எரிவாயு சலவைப்பெட்டிகள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் 5 நபர்களுக்கு ரூ.5.28 இலட்சம் மதிப்பில் ஒன்றிய அரசு நிதி உதவி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 4 நபர்களுக்கு ரூ.1.06 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் 31 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் 38 நபர்களுக்கு ரூ.6.66 இலட்சம் மதிப்பில் உதவித்தொகை, கூட்டுறவுத்துறை சார்பில் 5 நபர்களுக்கு ரூ.2.50 இலட்சம் மதிப்பில் கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.39 இலட்சம் மதிப்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் உதவி உபகரணங்கள், வருவாய்த்துறை சார்பில் 200 பயனாளிகளுக்கு ரூ.1.14 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 14 நபர்களுக்கு காப்பீட்டு அட்டைகள் என மொத்தம் 334 பயனாளிகளுக்கு ரூ.1.84 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் வழங்கினார். முன்னதாக, நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், மூலப்பள்ளிபட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தின் கீழ், ரூ.16.65 இலட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திறந்து வைத்து, குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அட்மா குழுத்தலைவர் ஆர்.இரவீந்திரன், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் வே.சாந்தி, திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை .சு.வடிவேல், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு, கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் க.பா.அருளரசு, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கலைச்செல்வி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் புவனேஸ்வரி, இராசிபுரம் வட்டாட்சியர் சு.சசிக்குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.