கோவை: ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்க கூடாது - கௌதமி !

நடிகை கௌதமி, ஆரம்ப கட்டத்திலேயே ஆட்டிசத்தை கண்டறிதலும்,சமுதாய ஆதரவும், நரம்பியல் வேறுபாடுகளை புரிந்து கொண்டு சேர்க்கும் எண்ணமும் மிக முக்கியம் எனக் கூறினார்.;

Update: 2025-04-13 03:31 GMT
கோவை ப்ரூக்ஃபீல்ட்ஸ் வணிக வளாகத்தில் ஆட்டிசம் குழந்தைகளை மேம்படுத்தும் விதமாக தர்ட் ஐ அமைப்பின் சார்பில் விழிப்புணர்வு காணொளி வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் நடிகை கௌதமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த காணொளியை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகை கௌதமி, ஆரம்ப கட்டத்திலேயே ஆட்டிசத்தை கண்டறிதலும்,சமுதாய ஆதரவும், நரம்பியல் வேறுபாடுகளை புரிந்து கொண்டு சேர்க்கும் எண்ணமும் மிக முக்கியம். மாற்றத்திற்காக மாற்றுத்திறனாளிகளை நாம் ஒருங்கிணைக்க வேண்டும். அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு திறமை உள்ளது. இது ஒரு நோய் அல்ல, இந்த குழந்தைகளை ஒதுக்கி வைக்க தேவையில்லை.ஆட்டிசம் குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான புத்துணர்வை அளிக்க வேண்டும். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மேம்படுத்த ஆசிரியர்கள் பலர் தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர். நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டேன். இந்த நோய் குணப்படுத்தக்கூடிய ஒரு நோய். 20 வருடமாக விடாமுயற்சியால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு தைரியத்தையும் விழிப்புணர்வையும் கொடுத்துள்ளோம். ஒரு குழந்தை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டால் சுற்றி இருக்கக்கூடிய குடும்பங்கள் அந்த குழந்தையை ஊக்குவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

Similar News