கோவை: பெண்ணுக்கு செயற்கை கை பொருத்தி அரசு மருத்துவமனை சாதனை !
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு உயர் மின்சாரம் தாக்கியதில் இழந்த இரு கைகளுக்கும் கோவை அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக செயற்கை கைகள் பொருத்தப்பட்டுள்ளன.;

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்த ருக்மணி(32) என்பவர் உயர் மின்சாரம் தாக்கியதில் இழந்த தனது இரு கைகளுக்கும் கோவை அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக செயற்கை கைகள் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு குழந்தைகளின் தாயான ருக்மணிக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் கைகள் செயலிழந்தன. முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பிப்ரவரி மாதம் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அதிநவீன ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது, யுனிவர்சல் கப் என்ற சுய உதவி சாதனம் மூலம் அளிக்கப்பட்ட சிறப்புப் பயிற்சியின் விளைவாக அவர் தனது பெயரை எழுதவும், அன்றாட பணிகளை பிறர் உதவியின்றி செய்யவும் உள்ளார். இது குறித்து நேற்று பேசிய மருத்துவமனை டீன் நிர்மலா, செயற்கை கை வெற்றிகரமாக பொருத்தப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், சிகிச்சையில் பங்களிப்பை ஏற்படுத்திய ஒவ்வொரு மருத்துவருக்கும், உதவியாக இருந்த ஒவ்வொருவருக்கும், நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். கோவை அரசு மருத்துவமனை இதுவரை சுமார் 200 பேருக்கு செயற்கை கை, கால் பொருத்தி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.