திருவள்ளுவர் கல்வி அறக்கட்டளை தொடக்கப்பள்ளியில் படிக்கும்
182 மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான இலவச காலணிகள்;
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருமணங்குடியில் செயல்பட்டு வரும் திருவள்ளுவர் கல்வி அறக்கட்டளை தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில், கீழ்வேளூர் எம்எல்ஏ நாகை மாலி, வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவர் ஏ.தாமஸ் ஆல்வா எடிசன், கீழையூர் வட்டார கல்வி அலுவலர் தை.லீனஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவர்களின் கண்கவர் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, திருச்சி மஹாமாயா அறக்கட்டளையின் சார்பில், பள்ளியில் படிக்கும் 182 மாணவ, மாணவிகளுக்கு சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள இலவச காலணிகள் வழங்கப்பட்டன. கீழையூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமச்சந்திரன், ஊராட்சி துணைத் தலைவர் குமாரசெல்வம், திருச்சி ஸ்ரீ மஹாமாயா அறக்கட்டளை நிர்வாகிகள் நா.சிவசங்கர், கோவிந்தராஜுலு மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவை, பள்ளி ஆசிரியர் தி.ஜவகர் ஒருங்கிணைத்தார். முன்னதாக, பள்ளி தலைமையாசிரியர் ரா.வெங்கடாசலம் வரவேற்றார். முடிவில், பள்ளி செயலர் திருஞானசம்மந்தம் நன்றி கூறினார்.