சேலத்தில் கிணற்றில் மூழ்கி பத்தாம் வகுப்பு மாணவன் பலி
நண்பர்களுடன் குளிக்க சென்ற போது பரிதாபம்;
சேலம் அம்மாபேட்டை சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மகன் பரணிதரன் (வயது 15). இவன் காமராஜர் காலனியில் உள்ள அரசு பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்தான். நேற்று மதியம் பரணிதரன் நண்பர்கள் சிலருடன் மாசிநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு கிணற்றுக்கு குளிக்க சென்றான். பின்னர் அவர்கள் கிணற்றில் இறங்கி குளித்தனர். அப்போது பரணிதரனுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி பலியானான். இதை பார்த்த நண்பர்கள் கூச்சலிட்டனர். இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். பின்னர் இதுகுறித்து செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரின் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிணற்றில் மூழ்கி பலியான மாணவன் பரணிதரன் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அப்போது பரணிதரன் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதையடுத்து மாணவனின் உடலை அம்மாபேட்டை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களுடன் குளிக்க சென்ற மாணவன் கிணற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.