நீட் தேர்வு அச்சத்தால் இன்னுயிரை மாய்த்துக் கொண்ட மாணவ,மாணவிகளுக்கு அதிமுக சார்பில் அஞ்சலி

நீட் தேர்வு அச்சத்தால் இன்னுயிரை மாய்த்துக் கொண்ட மாணவ,மாணவிகளுக்கு அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தினர்.;

Update: 2025-04-20 06:51 GMT
அரியலூர், ஏப்.20- நீட் தேர்வு அச்சத்தால் இன்னுயிரை மாய்த்துக் கொண்ட மாணவ, மாணவிகளுக்கு அரியலூர் அண்ணாசிலை அருகே அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை நடைபெற்றது. கடந்த 2021}இல் இருந்து இதுவரை நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் 22 மாணவ, மாணவிகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் வகையில் அதிமுக மாணவர் அணி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 19 ஆம் தேதி மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்படும்  அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தார்.அதன்படி, சனிக்கிழமை மாலை அரியலூர் அண்ணாசிலை அருகே வைக்கப்பட்டிருந்த உயிரிழந்த மாணவ, மாணவிகளின் உருவப் படங்களுக்கு முன்பு முன்னாள் அரசு தலைமைக் கொறடாவும், அக்கட்சியின் மாவட்டச் செயலருமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில், அமைப்புச் செயலர் ஐ.மகேந்திரன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம், ப.இளவழகன், பொருளாளர் அன்பழகன், நகரச் செயலர் செந்தில், அம்மா பேரவை மாவட்டச் செயலர் சங்கர், இணைச் செயலர் பிரேம்குமார், மகளிரணி மாவட்டச் செயலர் ஜீவா முன்னாள் அரசு வழக்குரைஞர் சாந்தி உள்ளிட்டோர் மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து,  நீட் தேர்வை ரத்து செய்ய ரகசியம் இருப்பதாக பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக இதுவரை நீட் தேர்வை ரத்து செய்யவில்லை எனக் கூறி கண்டன முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். :

Similar News