பாஜக துணை தலைவர் கேபி. ராமலிங்கம் விடுதலை

பாஜக மாநிலத துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் தருமபுரி மாவட்டம் பாரத மாதா ஆலய வளாகத்தில் அத்துமீறி நுழைந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.;

Update: 2025-04-23 01:21 GMT
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் சுப்பிரமணிய சிவா மணி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா ஆலய வளாகத்தில் வழிபட, கடந்த 2022-ம் ஆண்டு காவல்துறை தடையை மீறி பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் மீது பாப்பாரப்பட்டி போலீஸார் பதிவு செய்த வழக்கு பென்னாகரம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர் இந்த வழக்கு தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் மாவட்ட கூடுதல் சார்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. 2025 ஏப்ரல் 4-ம் தேதி இந்த வழக்கு தருமபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட 11 பேரையும் நேற்று (22-ம் தேதி) நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியது தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி சுப்பிரமணிய சிவா மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா ஆலயம் தமிழக அரசால் பூட்டப்பட்டது. இந்து கலாச்சாரத்தின்படி கட்டப்பட்ட இந்த ஆலயத்தை வழிபாட்டுக்கு உரிய இடம் இல்லை என்று கூறி 11.08.2021 அன்று பூட்டினார்கள். 2022-ம் ஆண்டு அதே தேதியில் பாரத மாதா ஆலயத்தில் பாஜக சார்பில் மாலை அணிவித்தோம். அப்போது தமிழக அரசு தடுத்ததால் ஏற்பட்ட பிரச்சினை தான் இந்த வழக்கு. அது தொடர்பான வழக்கில் இன்று நீதி வென்றுள்ளது. பாரத மாதாவின் விலங்கு உடைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அனைத்து பிரிவுகளும் தவறானவை என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கு புனையப்பட்ட வழக்கு என மறைமுகமாக நீதிபதி கூறியுள்ளார். பாரத மாதா ஆலயம் உலகம் முழுக்க உள்ள மக்களும் அறியும் வகையில் அதை புனரமைக்க வேண்டும் என பாஜக விரும்புகிறது. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இங்கே வந்தபோதும் இதை சொல்லிச் சென்றார். புதிதாக இடம் வாங்கியாவது இதுபோன்ற ஆலயத்தை கட்டுவோம் என்றார். பாரத மாதா ஆலயம் உட்பட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் அனைத்தும் மத்திய அரசின் நேரடி கண்காணிப்புக்குள் வர வேண்டும். தமிழக அரசோ, செய்தித் துறையோ தன் கட்டுப்பாட்டில் இதுபோன்ற இடங்களை வைத்துக் கொள்ளக் கூடாது என்பது எங்கள் விருப்பம். இவ்வாறு கூறினார்.இந்நிகழ்ச்சியின்போது மாவட்டத் தலைவர் சரவணன் மாவட்ட பொதுச்செயலாளர் ஐஸ்வர்யம் முருகன் நகர செயலாளர் ஆறுமுகம் கணேசன். கட்சி நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Similar News