திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோயில் சித்திரை பரணி பெருவிழா
தெருவடைத்தான் சப்பரம் - திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்;
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடியில், உத்தராபதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், ஆண்டு தோறும் சித்திரை பரணி பெருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டு சித்திரை பரணி பெருவிழா கடந்த 22-ம் தேதி தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெருவடைத்தான் சப்பரம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. தெருவை அடைத்து கொண்டு சப்பரம் வருவதால் இந்த நிகழ்ச்சிக்கு தெருவடைத்தான் சப்பரம் என்று பெயர் பெற்றுள்ளது. சப்பரத்தில், வெள்ளி ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தரும், அன்னபட்சி வாகனத்தில் அம்மனும், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியரும், மூஞ்சூரு வாகனத்தில் விநாயகரும், சிறிய ரிஷபவாகனத்தில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளினர். வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தை திருப்புகலூர் வேளாக்குறிச்சி ஆதீனம் 18-வது குருமகா சன்னிதானம் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ஆதீன இளவரசு அஜபா நடேஸ்வர சுவாமிகள் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதில், கோவில் பொருளாளர் சுதாகர், உபயதாரர் சந்தானம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சப்பரத்தை வடம் பிடித்து இழுத்தனர். இதில், திருச்செங்காட்டங்குடி, திருமருகல், புதுக்கடை, திருப்புகலூர், திருக்கண்ணபுரம், கீழப்பூதனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க, நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.