பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்
தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை;
மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி கீழயிருப்பு மெயின்ரோட்டை சேர்ந்தவர் நாகையன். இவரது மகள் அபிநயா (29). இவர் 2023-ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்தார். இதை தொடர்ந்து, அவர் நாகை மாவட்ட ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியில் இருந்தார். இதற்காக, நாகப்பட்டினம் காடம்பாடியில் உள்ள ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு (24-ம் தேதி) நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள, மாவட்ட கருவூலத்திற்கு பாதுகாப்பு பணிக்காக வந்தார். இவருடன் சினேகா என்ற போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று (25-ம் தேதி) காலை சினேகா கண்விழித்து பார்த்தார். அப்போது, தன்னுடன் பணியில் இருந்த அபிநயாவை துப்பக்கியுடன் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சினேகா ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் தேடினார். உடனடியாக ஆயுதப்படை பிரிவு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில், ஆயுதப்படை பிரிவு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மாவட்ட கருவூலம் அலுவலகம் எதிரே இருந்த அறை உள்ளே பூட்டப்பட்டு இருந்தது கண்டு சந்தேகம் அடைந்த ஆயுதப்படை பிரிவு போலீசார் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு அபிநயா இருக்கையில் அமர்ந்தபடி பாதுகாப்பு பணிக்காக தான் வைத்திருந்த INSAS 5.56 MM ரக துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து ரத்த வெள்ளத்தில் இருந்தை கண்டு ஆயுதப்படை பிரிவு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் நாகூர் போலீஸ் நிலையத்திற்கு தெரிவித்தனர். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் மற்றும் போலீசார் வந்தனர். ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் பூட்டப்பட்டு யாரும் உள்ளே செல்ல அனுமதி அளிக்கவில்லை. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மற்றொரு பெண் காவலர் சினேகாவிடம் 2 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து தடவியல் போலீசார் வரவழைக்கப் பட்டனர். அபிநயா வைத்திருந்த துப்பாக்கி, தோட்டா மற்றும் கைரேகைகள் ஆகியவை சேகரிக்கப்பட்டது. இது குறித்து, நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அபிநயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யும் டாக்டர் குழுவினர் இல்லாத காரணத்தால், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நாகை ஆயுதப்படை பிரிவில் பணியாற்றிய வினோத், அபிநயா ஆகிய 2 பேரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். வினோத்திற்கு திருமணம் ஆகி குழந்தை இருப்பதால், வினோத் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அபிநயாவை திருமணம் செய்து வைக்க மறுத்தனர். இதனால் வினோத் கடந்த 1-ம் தேதி காடம்பாடியில் உள்ள ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். அது முதல் அபிநயா மன உளைச்சலில் இருந்துள்ளார். வினோத் இறந்த பின்னர் மருத்துவ விடுப்பில் சென்ற அபிநயா, கடந்த 5 நாட்களுக்கு முன்பு மீண்டும் பணிக்கு வந்தார். பணிக்கு வந்த நாள் முதல் அபிநயா மாவட்ட கருவூலத்தில் இரவு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். மன உளைச்சல் காரணமாக, அபிநயா தற்கொலை செய்து கொண்டாரா?அல்லது பணிச்சுமையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, அபிநயாவுடன் பழகிய மற்ற பெண் காவலர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.