தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பாலங்களின் உறுதித்தன்மை குறித்தும், அதிக மழை வந்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படும் சாலைகள் மற்றும் பாலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் மழைநீர் தேங்காத வகையில் முன்னெச்சரிக்கயாக நடவடிக்கை எடுக்க வேண்டும்;
தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.ச.வைத்தியநாதன் அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று (28.05.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க இருப்பதாக மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்புகள் குறித்து அறிவுறுத்தியுள்ளார்கள். அவ்வாறாக பெரம்பலூர் மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை காலத்தில் பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும், உடமைகளுக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்வது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை வெள்ள காலத்தில், வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே பாதுகாப்பாக தங்க வைக்க ஏதுவாக தற்காலிக முகாம்களை ஏற்படுத்துதல், வட்டாட்சியர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பள்ளி கட்டடங்கள், திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டு அவற்றின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்து தயார் நிலையில் வைத்திருத்தல், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இருமடங்கு தேவைகளை மூன்று மாதத்திற்கு இருப்பு வைத்துக்கொள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளரும், மாவட்ட வழங்கல் அலுவலரும் நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்கள் தெரிவித்தார். ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் உள்ள நீர்நிலைகள், பொதுப்பணித்துறையின் சார்பில் உள்ள நீர்நிலைகளை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்து நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் உடனே அகற்றிடவும், நீர்நிலைகளின் கரைகள் பலமாக உள்ளதா என்பதை ஆய்வு செய்து, பலவீனமாக இருக்கும் கரைகளை பலப்படுத்திடவும், நீர்நிலையில் இருந்து தண்ணீர் வெளியேறும் மதகுகளின் நிலை குறித்தும் ஆய்வு செய்து சரிசெய்திட வேண்டும் எனவும், . பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் ஆய்வு செய்து, எந்தெந்த நீர்நிலையினை யார் யார் ஆய்வு செய்தார்கள், நீர்நிலையில் தற்போதைய நிலை, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஒருவார காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்கள் அறிவுறுத்தினார். வட்டார அளவில் தீயணைப்பு மற்றும் மீட்புபணித் துறையின் மாதிரி செயல் விளக்கம் (Mock Drill) நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். இது தொடர்பான அறிக்கையினை அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களும் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) வழியாக 06.06.2025க்குள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும், தென்மேற்கு பருவமழை காலங்களில் தேவையான Power Saw and Cutters, Runner Boats, Lifebuoys, Life Jackets போன்ற மீட்பு உபகரணங்கள் வெள்ளம் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் பயன்படுத்திட தயார் நிலையில் உள்ளதா என்பதை முன்கூட்டியே உறுதி செய்து கொள்ள வேண்டும். வெள்ளத் தடுப்புபணிக்காக போதுமான அளவில் மணல் மூட்டைகள் (Sand Bags) மற்றும் சவுக்கு குச்சிகளை (Casuarina Poles) தேவைப்படும் இடங்களில் முன்னதாகவே இருப்பு வைத்திட வேண்டும். மேலும் ஆறுகள், ஏரிகள் மற்றும் வரத்துவாய்க்கால்களின் கரைகள் உடையும்பட்சத்தில் உடன் சரிசெய்ய ஜேசிபி -ஹிட்டாச்சி (JCB / Hitachi) உள்ளிட்ட இயந்திரங்களை அதனை இயக்கும் நபருடன் தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும் எனவும், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பாலங்களின் உறுதித்தன்மை குறித்தும், அதிக மழை வந்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படும் சாலைகள் மற்றும் பாலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் மழைநீர் தேங்காத வகையில் முன்னெச்சரிக்கயாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தென்மேற்கு பருவமழை காலங்களில் சுகாதாரத்துறையினர் போதுமான அளவில் அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகளை இருப்பு வைத்திருக்க வேண்டும் . வட்டார அளவில் மருத்துவக் குழுவினரை சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இயற்கை இடர்பாடு ஏற்பட்டு மின்சார கம்பிகள் அறுந்து விழும் சூழல் உருவானால் அவற்றை யாருக்கும் பாதிப்பின்றி உடனடியாக அப்புறப்படுத்தவும், தடையின்றி சூழ்நிலைக்கு ஏற்றவாறு மின்விநியோகம் செய்திடவும் மின்சார வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும், மழைக்காலங்களில் நீர்நிலைகளில் பொதுமக்கள், சிறுவர் சிறுமியர் குளிப்பதையோ, செல்பி புகைப்படங்கள் எடுப்பதையோ தவிர்க்க அறிவுறுத்தியும், நீர்நிலைகளில் ஆழமான பகுதிகள் குறித்து விழிப்பு ஏற்படுத்தவும் நீர்நிலைகளின் கரைகளில் விழிப்புணர்வு பதாகைகள் அமைக்க வேண்டும் எனவும், பேரிடர் தொடர்பான அனைத்து தகவல்கள் மற்றும் புகார்கள் TNSMART APP செயலி மூலமே தெரிவிக்கப்படும் என்பதால் அனைத்து அலுவலர்களும் செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். மேலும் TNSMART APP மூலம் பெறப்படும் புகார்களுக்கு உடனடி தீர்வு கண்டு உடனுக்குடன் பதில் அனுப்பப்படவேண்டும். மேலும் தற்போது மின்னல் தாக்கி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, இதை தவிர்க்கும் பொருட்டு அனைத்து அலுவலர்களும் மற்றும் பொதுமக்களும் தங்கள் பகுதியில் மின்னல் வருவதை முன்கூட்டியே அறிந்திடும் வண்ணம் தாமினி (DOMINI) என்கிற APP உருவாக்கப்பட்டுள்ளது இந்த APP (செயலியை) அனைவரும் தங்களது அலைபேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்கள் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற எண்ணிலும், 1800-425-4556 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தெரிவித்தார். இக்கூட்டத்தில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மு.செல்வம், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் திருமதி சத்யா, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கலைவாணி, முதன்மைக்கல்வி அலுவலர் முருகாம்பாள், கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் இளஞ்செல்வி, நகராட்சி ஆணையர் ராமர், தாட்கோ மேலாளர் கவியரசு, பேரிடர் மேலாண்மைத்துறை வட்டாட்சியர் ச.பழனிச்செல்வன், அனைத்து வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.