கோவை: தி.மு.க பிரமுகரை கண்டித்து பெண்கள் போராட்டம் !
கடன் தருவதாக கூறி பணம் பெற்ற தி.மு.க துணைத் தலைவர் மனைவியை எதிர்த்து பெண்கள் போராட்டம்.;
கோவை இடிகரை பேரூராட்சியின் துணைத் தலைவர் மற்றும் தி.மு.க நிர்வாகியான சேகரின் மனைவி சுதா, மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு 2 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்று தருவதாக கூறி, ஒவ்வொருவரிடமும் 8,000 முதல் 13,000 ரூபாய் வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. 10 மாதங்களாக பணமும் திருப்பித் தரவில்லை, கடனும் வழங்கப்படவில்லை என குற்றஞ்சாட்டிய அந்த பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் துடியலூரில் இருந்து அன்னூர் செல்லும் சாலையை மறித்து நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, பெண்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.