வழக்குகளை சமரச மையம் மூலம் சுமூகமாக தீர்வு காண அழைப்பு
வழக்குகளை சமரச மையம் மூலம் சுமூகமாக தீர்வு காண அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.;
அரியலூர்,ஜூலை 5: . அரியலூர் மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில் 90 நாள்களில் நடைபெறும் சிறப்பு சமரச தீர்வு முகாம்களில், வழக்குரைஞர்கள், வழக்காடிகள் கலந்து கொண்டு தங்களது வழக்குகளை சுமூகமாக தீர்வு காணலாம் என மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ப.மலர்வாலண்டினா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவித்தது: இந்தியாவில் உள்ள அனைத்து உயர் நீதிமன்றங்கள், மாவட்ட மற்றும் வட்ட அளவில் செயல்படும் அனைத்து நீதிமன்றங்களிலும், நிலுவையில் உள்ள வழக்குகளை சமரச முறையில் தீர்வு காண ஜூலை முதல் செப்டம்பர் வரை 90 நாள்கள் சிறப்பு சமரச தீர்வு முகாம்களை நடத்திட உச்ச நீதிமன்றம் ஏற்பாடு செய்துள்ளது.அதன்படி, அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களில் நடைபெறும் இந்த சிறப்பு சமரச தீர்வு முகாமில் வழக்குரைஞர்கள் மற்றும் வழக்காடிகள் இருதரப்பினரும் பங்கேற்று தங்களது வழக்குகளை சமரச மையம் மூலம் சுமூகமாக பேசி தீர்வு காணலாம். சமரச முறையில் தீர்வு காணப்படும் வழக்குகளுக்கு நீதிமன்ற முத்திரைக் கட்டணம் முழுவதுமாக திரும்பக் கிடைக்கும். வழக்கின் சமாதான உடன்படிக்கை இருதரப்பினருக்கும் உடனடியாக இலவசமாக தரப்படும்.மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட சமரச மையத்தினையோ அல்லது ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை பகுதி நீதிமன்றங்களில் செயல்படும் வட்டார அளவிலான சமரச மையத்தினை தொடர்புக் கொண்டு பயன்பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.