அரசு கலை கல்லூரியில் அறிமுக பயிற்சி முகாம்
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு அறிமுக பயிற்சி முகாம் நடந்தது;
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவ, மாணவியர்களுக்கு அறிமுக பயிற்சி முகாம் முதல்வர் (பொ) சரவணாதேவி தலைமையில் நடந்தது. வேலை வாய்ப்பு மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் மாணவருக்கு வழங்கப்படும் வேலைவாய்ப்பு பயிற்சி, போட்டித்தேர்வுகள், நேர்காணலில் பங்கு கொள்வதற்கான நுண்திறன் பயிற்சி, பல்வேறு நிறுவனங்களில் நடத்தப்படும் வளாக தேர்வுகள் பற்றியும், மாணவர்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்று கூறப்பட்டது. மாணவ, மாணவியர்கள் அச்சமின்றி கல்லூரிக்கு வரும் வகையில், பகடிவதை தொடர்பான புகார் எளிதில் உரிய அதிகாரிகளிடம் தெரியப்படுத்தும் வகையில், கல்லூரியில் மூத்த பேராசிரியர்கள் அடங்கிய பகடிவதை தடுப்புக்குழு செயல்படுகிறது என்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பகடிவதையில் ஈடுபடும் மாணவர்கள் பற்றி புகார்களை அளிப்பது பற்றியும், பல்வேறு பகடிவதை வகைகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஒரு நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளின் தகவல் தேவைகளை பூர்த்தி செய்தல் பற்றியும், இதில் தரவுகளை சேகரித்தல், செயலாக்குதல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் மாணவர்கள் தேவையான தகவல்களை பதிவேற்றம் செய்யும் முறைகள் பற்றி கூறப்பட்டது. விளையாட்டு துறையின் செயல்பாடுகள் பற்றியும், பல்வேறு விளையாட்டுகளில் பயிற்சி பெறுவது பற்றியும், விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறுவது பற்றியும் கூறப்பட்டது. இதில் பேராசிரியர்கள் ரகுபதி, ஜெயவேல், ஈஸ்வரமூர்த்தி உள்பட பலர் பேசினர்.