கூலித் தொழிலாளி கொலை வழக்கில் லாரி ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை
கூலித் தொழிலாளி கொலை வழக்கில் லாரி ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.;
அரியலூர்,ஜூலை 9- அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள கோவில் எசனை வடக்குத் தெருவைச் சேர்ந்த ராஜாங்கம் மகன் மனோகருக்கும்(50), லாரி ஓட்டுநர் விஜயகாந்த்(40) மனைவி கௌதமிக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது. இதனை கிராம முக்கியஸ்தர்கள் இரண்டு பேரையும் கண்டித்துள்ளனர். விஜயகாந்த் தனது மனைவி, குழந்தைகளுடன் சென்னைக்கு சென்றுவிட்டார். அங்கு நான்கு ஆண்டுகளாம் தங்கியிருந்து, மீண்டும் ஊர் திரும்பியுள்ளனார். இந்நிலையில், கடந்த 19.4.2023 அன்று விஜயகாந்த் வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், வீட்டில் தனியாக இருந்த கௌதமியிடம், மது போதையில் வந்த மனோகர் தகராறில் ஈடுபட்டுள்ளார். மறுநாள் காலை(20.4.2023)வேலை முடிந்து வீட்டுக்கு வந்த விஜயகாந்திடம், நடந்த சம்பவங்கள் குறித்து கௌதமி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜயகாந்த், அய்யனார் கோயில் பொதுமேடையில் படுத்திருந்த மனோகரனை இரும்பு ராடால் தாக்கி கொலை செய்தார். இதுகுறித்து வெங்கனூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து, விஜயகாந்தை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி மலர்வாலாண்டினா, குற்றவாளி விஜயகாந்த்துக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீர்ப்பளித்தார். இதையடுத்து விஜயகாந்த் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அரசு தரப்பில் வழக்குரைஞர் சின்னதம்பி ஆஜராகி வாதாடினார்.