அழகின் நீர்மட்டம் உயர்வு

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96 அடியாக உயர்வு;

Update: 2025-07-12 04:27 GMT
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடிகொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. நீலகிரி, கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை எதிரொலியாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95.98 அடியாக உயர்ந்து உள்ளது. இன்று காலை அணைக்கு 2,857 கன அடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது.பவானிசாகர் அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி நீரும், தடப்பள்ளி -அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும், காலிங்கராயன் பாசனத்திற்கு 350 கன அடியும்,கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 கன அடி நீரும் என மொத்தம் 1,255 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வந்தாலும் மற்ற அணைகள் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் 25. 21 அடியாக உள்ளது. இதேபோல் வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 22.34 அடியாக சரிந்து உள்ளது. 30 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 14.84 அடியாக சரிந்து உள்ளது. ஒருபுறம் பவானி சாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும் மறுபுறம் மற்ற அணைகளின் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் வேதனை அடைந்துள்ளனர்.

Similar News