வேளாண் இயந்திர கருவிகளின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு முகாம்
வேளாண் இயந்திர கருவிகளின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.;
அரியலூர், ஜூலை 14: அரியலூர் நகராட்சி சந்தை வளாகத்தில், வேளாண் பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்களின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான சிறப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்கியது இம்முகாமை ஆட்சியர் பொ.ரத்தினசாமி தொடக்கி வைத்து தெரிவிக்கையில், இம்முகாமில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை இயக்குதல், பராமரித்தல், செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாத பணிகள், பழுதுகளைக் கண்டறிதல், உதிரிப் பாகங்கள் குறித்த தெளிவுரை, மசகு எண்ணெய் மற்றும் உயவுப் பொருட்கள் பயன்பாடு பற்றி விவசாயிகளுக்கு தெளிவுரை வேளாண் பொறியாளர்களாலும், தனியார் இயந்திர நிறுவனங்களாலும் வழங்கப்பட்டது. வேளாண்மைப் பொறியியல் துறைக்கு சொந்தமான நடமாடும் பழுது நீக்கும் இயந்திரத்தின் மூலம் விவசாயிகளுக்கு சிறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது குறித்த செயல் விளக்கங்களும் அளிக்கப்பட்டது. மேலும், 8 களையொடுக்கும் இயந்திரங்கள் 60 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும், விவசாயிகள் தங்களது சொந்த டிராக்டர் மற்றும் உபகரணங்களை இம்முகாமில் கொண்டு வந்து பராமரிப்பு செய்து கொள்வதற்கான வசதிகளும், முகாமில் கலந்துகொள்ளும் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இத்துறையில் நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் டிராக்டர் ஓட்டுநர் பயிற்சியில் சேர்ந்துபயன்பெறுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இம்முகாமினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். முகாமுக்கு, சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலை வகித்தார். வேளாண் செயற் பொறியாளர் சிவபிரகாஷ், கோட்டாட்சியர் கோவிந்தராஜன், வட்டாட்சியர் முத்துலெட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். :