ராயல் இண்டர்நேஷனல் பள்ளியின் விளையாட்டு வளாகம் திறப்பு
குமாரபாளையம் ராயல் இண்டர்நேஷனல் பள்ளியின் விளையாட்டு வளாகம் மற்றும் குழந்தைகள் விளையாட்டு உலகம் திறப்பு விழா நடந்தது;
ராயல் இண்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியின் விளையாட்டு வளாகம் மற்றும் குழந்தைகள் விளையாட்டு உலகம் ஆகியவற்றின் திறப்பு விழா தாளாளர் அன்பழகன் தலைமையில் நடந்தது. தேசிய மாணவர் படை (NCC), சாரணர் மற்றும் வழிகாட்டி இயக்கம் மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது. செயலாளர் முருகேசன், பொருளாளர் கவிதா ஆனந்தன் , பள்ளி முதல்வர் ராஜஸ்ரீ உள்பட பலர் குத்துவிளக்கையேற்றி விழாவினைத் தொடங்கி வைத்தனர். சிறப்பு விருந்தினராக நாமக்கல் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் கோகிலா பங்கேற்று, விளையாட்டு வளாகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். சிறப்பு விருந்தனர் கோகிலா பேசியதாவது: நாமக்கல் மாவட்டம் என்றாலே கல்விக்குத் தான் முதலிடம் கொடுப்பார்கள். ஆனால் ராயல் சர்வதேசப் பள்ளியில் கல்விக்கு மட்டுமின்றி, விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருவது வரவேற்கத்தக்கது. . மாணவர்கள் மாநில அளவிலான விளையாட்டிலும் பங்கு பெற்று, முதல்வர் கோப்பையைக் கைப்பற்றுவதுடன் அரசு வழங்கும் வேலை வாய்ப்பினைப் பெற்று, வாழ்வில் மென்மேலும் உயர வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் பேசினார்.